ரூ.2 லட்சம் கோடிப்பு.. இந்தியாவுக்கு மட்டும் இவ்வளவு பெரிய இழப்பா..!
அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பையம் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை CREA அமைப்பு புள்ளிவிபரத்தோடு கணக்கிட்டு வெளியிட்டு உள்ளது.
ஈரான் போர் மூலம் கடல் வழியாக வரும் கச்சா எண்ணெய், எண்ணெய் பொருட்கள், இயற்கை எரிவாயு போன்றவற்றின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஈரான் ராணுவம் ஹார்முஸ் வழித்தடத்தை மொத்தமாக முடக்கிய காரணத்தால் இத்தகைய நிலை உருவானது, பிப்ரவரி மாதம் துவங்கிய போர் மூலம் கடந்த 6 மாதத்தில் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டாலர் தொகையை கூடுதலாக கொடுத்து எரிபொருளை வாங்கியுள்ளது.

போருக்கு முன்பு இருந்த விலை நிலையும், பிப்ரவரி மாதம் போர் துவங்கிய பின்பு ஏற்பட்ட விலை உயர்வை ஒப்பிடுகையில் ஆசிய நாடுகள் வாங்கும் எல்என்ஜி விலை சராசரியாக 75 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஐரோப்பா வாங்கும் எல்என்ஜி விலை 60 சதவீதமும், டீசல் 59 சதவீதமும், கச்சா எண்ணெய் 35 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது என Centre for Research on Energy and Clean Air (CREA) அமைப்பு கணக்கிட்டு உள்ளது. இந்த விலை உயர்வால் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டாலர் தொகையை கூடுதலாக செலவு செய்துள்ளது.
இதில் பெரும் பங்கை ஐரோப்பிய நாடுகள் செலுத்தியுள்ளது சுமார் 78 பில்லியன் டாலர் தொகையை கூடுதலாக செலவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து சீனா 35 பில்லியன் டாலர், இந்தியா 22 பில்லியன் டாலர் அளவிலான தொகையை செலவு செய்துள்ளது.
இந்த 22 பில்லியன் டாலர் என்பது இன்றைய டாலர் மதிப்பில் 2,09,836 கோடி ரூபாயாகும். இந்த இழப்பை சமாளிக்கவே மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது.
இந்த 6 மாத கால போரில் இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது, எல்என்ஜி இறக்குமதி தான். சீனாவுக்கு அடுத்தாக உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்கமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் வேளையில் மார்ச் மாதம் நாட்டின் LNG இறக்குமதி என்பது 49 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹார்முஸ் முடக்கம்.
இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எல்என்ஜி இறக்குமதி என்பது வெறும் 8 சதவீதத்தில் இருந்து 32 சதவீதம் வரையில் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்தது. இதன் மூலம் தற்போது இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியமான எரிவாயு சப்ளையராக மாறியுள்ளது.

