Last Updated:
சிவப்பிரசாத் என்பவர் 50 வயது விதவை நாகமணியை திருமணம் செய்து, 25 கோடி ரூபாய் சொத்துகளை சுருட்டி கொண்டு தலைமறைவு ஆனார்.
1700 கோடி ரூபாய் சொத்து தனக்கு சொந்தமாக உள்ளது என்று கூறி முப்பது கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான 50 வயது விதவையை திருமணம் செய்து மொத்த சொத்தையும் சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராஜூபேட்டா கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி(50). இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரை சேர்ந்த வெங்கடப்பா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு மகன் இருந்தார். 15 ஆண்டுகளுக்கு முன் அவர்களுடைய மகன் சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்ட நிலையில் அதன்பின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வெங்கடப்பாவும் மரணமடைந்து விட்டார்.
இதனிடையே, மகன், கணவன் ஆகியோர் மரணம் அடைந்துவிட்ட காரணத்தால் தனி மரமாக வசித்து வந்தார் நாகமணி. நாகமணிக்கு சித்தூரை சேர்ந்த திருமண புரோக்கர் மூலம் பங்காரு பாளையத்தை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் அறிமுகமானார்.
நீ தனியாக வசித்து சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. எனவே கொரோனாவில் மகளையும் மனைவியையும் பறிகொடுத்த உன்னை நான் மணந்து கொள்கிறேன். இரண்டு பேரும் சந்தோஷமாக வாழலாம் என்று கூறினார் சிவப்பிரசாத். அவருடைய பேச்சை உண்மை என்று நம்பிய நாகமணி சிவப்பிரசாத்தை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஏதேதோ காரணங்களை கூறி நாகமணியின் வங்கி கணக்கில் இருந்து மூன்று கோடி ரூபாய் பணத்தை சிவப்பிரசாத் தன்னுடைய அண்ணன், அண்ணி ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டார். அதன்பின் தனக்கு 1700 கோடி ரூபாய் வரவேண்டிய பணம் உள்ளது. அந்த பணத்தைப் பெற 15 கோடி ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி நாகமணியை நம்ப செய்த சிவபிரசாத், சித்தூர் அருகே நாகமணிக்கு சொந்தமாக இருந்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், பெங்களூரில் நாகமணிக்கு சொந்தமாக இருந்த 15 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஆகியவற்றை விற்பனை செய்ய வைத்து அந்த பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவு ஆகிவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தன்னிடம் இருந்து சுமார் 25 கோடி ரூபாய் பணத்தை அபகரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சிவபிரசாத், மனைவி குழந்தைகள் ஆகியோருடன் பங்காரு பாளையத்தில் சந்தோசமாக வாழ்வதை அறிந்த நாகமணி தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து நேற்று மனுநீதி நாளில் சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். நாகமணி அளித்த புகாரை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
July 09, 2025 5:36 PM IST


