ரி20 உலகக் கிண்ணத்தில் போட்டியை நடத்தும் நாடுகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவை வீழ்த்தி முறையே தென்னாபிரிக்கா மற்றும் நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
அன்டிகுவாவில் சுப்பர் 8 இன் குழு 2 இற்காக இலங்கை நேரப்படி நேற்று (24) நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்ட தென்னாபிரிக்க அணி மழையின் இடையூறுக்கு மத்தியில் 3 விக்கெட்டுகளால் டக்வர்த் லுவிஸ் முறையில் பரபரப்பு வெற்றியை பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியை 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த தென்னாபிரிக்க அணியால் முடிந்தது. மத்திய வரிசையில் ரொஸ்டன் செஸ் 42 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றார். தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அன்ட்ரே ரசல் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதனால் 75 நிமிடங்கள் போட்டி தடைப்பட்டதால் டக்வர்த் லுவிஸ் முறையில் தென்னாபிரிக்க அணியின் வெற்றி இலக்கு 17 ஓவர்களில் 123 ஆக மாற்றப்பட்டது. இந்த இலக்கை எட்டுவதற்கு தென்னாபிரிக்க அணி கடைசி ஓவர் வரை போராடியதோடு சொந்த ரசிகர்களுக்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணி கடும் நெருக்கடி கொடுத்தது.
தென்னாபிரிக்க அணி ஏழு பந்துகளில் ஒன்பது ஓட்டங்களை பெற வேண்டி இருந்துபோது ககிசோ ரபாடா பௌண்டரி ஒன்றை பெற்றதை அடுத்து அந்த அணி வெற்றியை நெருங்கியது. இதன்படி தென்னாபிரிக்க அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
முன்னதாக குழு 2 இல் நடந்த அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டி முதல் அணியாக ரி20 உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அமெரிக்க அணி 18.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கே சுருண்டது.
கிறிஸ் ஜோர்டன் அமெரிக்காவின் கடைசி மூன்று விக்கெட்டுகளையும் ஹட்ரிக் விக்கெட்டுகளாக அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தியதோடு அவர் 2.5 ஓவர்களில் 10 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இதன்மூலம் நிகர ஓட்ட விகிதத்தை அதிகரித்துக் கொண்டே இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதன்போது அணித் தலைவர் ஜோஷ் பட்லர் 38 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களை விளாசினார்.

