Last Updated:
சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம், உலகின் மிகப்பெரிய விலங்கு காப்பகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வன விலங்குகள் மீட்பு மையத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் ஆதரவுடன் குஜராத்தின் ஜாம்நகரில் வந்தாரா என்கிற பிரம்மாண்டமான விலங்குகள் மீட்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இது அனந்த் அம்பானியின் கனவுத் திட்டமாக கருதப்படுகிறது. சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையம், உலகின் மிகப்பெரிய விலங்கு காப்பகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இங்கு 200-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றுக்காக நீர் சிகிச்சைக் குளங்கள், பிரம்மாண்டமான யானை மருத்துவமனை மற்றும் நவீன தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமான ‘வந்தாரா’ மேற்கொண்ட வனவிலங்கு இறக்குமதி சட்டவிரோதமானது என்று கூறி, அது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவில் எழுப்பப்பட்ட புகார்கள் ஏற்கனவே நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 2025 செப்டம்பர் மாதமே இந்த சிறப்பு விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டது. அந்த அறிக்கையில், வந்தாரா மையத்தில் உள்நாட்டுச் சட்டங்களோ அல்லது சர்வதேசச் சட்டங்களோ எவ்விதத்திலும் மீறப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முறையான அனுமதி மற்றும் ஆவணங்களுடன் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளை, பின்னர் யாரோ ஒருவர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார் என்பதற்காக சட்டவிரோதமானது என்று கருத முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
ரிலையன்ஸ் ‘வந்தாரா’ மையத்திற்கு உச்ச நீதிமன்றம் நற்சான்றிதழ்: சட்டவிரோத இறக்குமதி புகார்கள் நிராகரிப்பு!


