Last Updated:
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானம் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய ராணுவம் நேற்று ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் பதிலடியை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது. எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் எல்லையோர மாநிலங்களான ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் பகுதிகளில் உள்ள எல்லை கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், இருதரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானம் மீது இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல் தொடருக்கு இடையூறு செய்வதற்காகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நக்வி, இதனால், இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் இன்னும் 8 போட்டிகள், ராவல்பிண்டி, முல்தான், லாகூரில் நடைபெற இருந்த நிலையில் இவை அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார். பிஎஸ்எல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களின் மனநலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போர் பதற்றம் காரணமாக பிஎஸ்எல் போட்டிகளில் பங்கேற்றிருந்த வெளிநாடு வீரர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் காரணமாக பல ஆண்டுகளாக வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு வராத சூழ்நிலை இருந்தது கவனிக்கத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


