India
oi-Vignesh Selvaraj
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில், கடந்த 2024 aaம் ஆண்டு ஜனவரி 22 aaம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அந்தக் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் கோவில் உண்டியல் காணிக்கை பணம் மற்றும் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் உத்தரப் பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 7ஆம் தேதி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராமர் கோவிலுடன் தொடர்புடைய பல கோடி ரூபாய் காணிக்கை பணம் மாயமாகிவிட்டதாக எக்ஸ் தளத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளைக்கு ரொக்கமாக மட்டுமே சுமார் 3,500 கோடி ரூபாய்க்கு அதிகமான காணிக்கை கிடைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர தங்கம்,மற்றும் வைர நகைகளும் வெள்ளிப் பொருட்களும் பெருமளவில் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளன. தற்போது, இந்தக் காணிக்கைப் பணம் மற்றும் நகைகள் முறையாகக் கணக்கில் காட்டப்படாமல் அறக்கட்டளை மற்றும் கோயில் ஊழியர்களால் களவாடப்பட்டுளதாக எழுந்துள்ள முறைகேடு புகார்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, ராமர் கோவில் நிதி சர்ச்சை குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு மூன்று பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரி விஜய் விஸ்வாஸ் பந்த், ஐபிஎஸ் அதிகாரி கிரண் மற்றும் நிதித்துறையின் சிறப்புச் செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் இடம்பெற்றனர்.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) முதற்கட்ட அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரையைத் தொடர்ந்து, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் நன்கொடை கையாடல் தொடர்பாக, எட்டு பேர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல்களின்படி, கோயில் அறக்கட்டளை முதல் தகவல் அறிக்கையில் எட்டு குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், அடையாளம் தெரியாத பல நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, மனிஷ் யாதவ், ராமசங்கர் மிஸ்ரா, ராமசங்கர் யாதவ் என்ற தின்னு, சுபாஷ் சந்திரா, கருணேஷ் பாண்டே ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. அனுகல்ப் மிஸ்ரா மற்றும் லவ்குஷ் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

