வயநாடு எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யவிருப்பதாகவும், அவருக்கு பதில் பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடவிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.இதனைதொடர்ந்து இரண்டில் ஒரு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், மல்லிகார்ஜுன கார்கே டெல்லி இல்லத்தில் காங்கிரஸ் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டு, அங்கு பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, வயநாடு மக்களுக்காக தானும், பிரியங்காவும் எப்போதும் குரல் கொடுப்போம் என்றார். வயநாட்டுக்கு அடிக்கடிச் செல்வேன் எனவும் ராகுல் காந்தி கூறினார். முதல்முறையாக தேர்தல் களத்திற்கு பிரியங்கா காந்தி வந்திருக்கும் சூழலில், தேர்தலை கண்டு தமக்கு அச்சமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலில் களமிறங்க வேண்டும் என்று அக்கட்சியினர் அண்மைக்காலமாக கருத்து தெரிவித்து வந்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் போட்டியிடுவதன் மூலம் தேர்தல் அரசியலில் முதல்முறையாக பிரியங்கா காந்தி களங்கிறங்கியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாத குறையே மக்களுக்கு தெரியாத அளவுக்கு பணியாற்றுவேன் என்றார்.
தேர்தலை கண்டு தமக்கு அச்சமில்லை எனவும் பிரியங்கா கூறினார். வயநாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
