Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் புதினுடன் உரையாடியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விரிவான உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், போர்நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்பை அறிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்தபோதும், ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் முடிவில் இருந்து இந்தியா பின்வாங்கவில்லை.
இதையடுத்து, குறிப்பிட்ட இந்திய பொருட்களுக்கு இனிமேல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “எனது நண்பர் அதிபர் புதினுடன் விரிவான உரையாடலை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
Had a very good and detailed conversation with my friend President Putin. I thanked him for sharing the latest developments on Ukraine. We also reviewed the progress in our bilateral agenda, and reaffirmed our commitment to further deepen the India-Russia Special and Privileged…
— Narendra Modi (@narendramodi) August 8, 2025
இந்தியா – ரஷ்யா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேசினேன். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
August 08, 2025 7:35 PM IST


