Last Updated:
ரஷ்யா – உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 3 வருடங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, நேடோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே உள்ளிட்டோருடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க – ரஷ்யா – உக்ரைன் அதிபர்கள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு ரஷ்ய அதிபர் புதின் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் டிரம்ப் அறிவித்தார். மேலும் ரஷ்யா – உக்ரைன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் நிதி உதவியுடன் அமெரிக்காவிடம் இருந்து 7 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்வது குறித்தும் டிரம்புடன் ஆலோசனை நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இதனிடையே அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து ரஷ்ய அதிபர் புதின் பேசினார். உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார். இந்நிலையில், டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடம் புதின் பேசியுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு குறித்து தன்னுடன் பகிர்ந்து கொண்ட புதினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் உடனான மோதலுக்கு ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இது தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா- ரஷ்யா இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடியுடன் புதின் ஆலோசித்தார்.
August 19, 2025 8:35 AM IST


