ரயில் பயணிகளுக்கு IRCTC புதிய இணையதளம் அறிமுகம்.. என்னென்ன மாறி இருக்கு தெரியுமா?
ரயில் பயணிகளுக்கு டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்கும் வகையில் ஐஆர்சிடிசி (IRCTC) தனது இணையதளத்தை முழுமையாக மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய இணையதளத்தின் பீட்டா பதிப்பு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
ரயில் பயணிகளின் நீண்டகால புகாராக இருந்த தேவையற்ற பாப்-அப்கள் , மின்னும் விளம்பரங்கள் மற்றும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் CAPTCHA குறியீடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தை வெகுவாக குறைக்கும். எனவே வேகமாக டிக்கெட் பதிவு செய்ய முடியும்டிக்கெட் பதிவில் முன்பு ஸ்லீப்பர், ஏசி எனஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாகத் தேட வேண்டி இருந்தது. ஆனால் புதிய இணையதளத்தில் அனைத்து வகுப்புகளின் இருக்கை விவரங்களையும் ஒரே திரையில் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய தேவைப்படும் படிநிலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி பயணம் செய்பவர்கள் தங்கள் விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி இருப்பதால், அடுத்தமுறை டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பெயர், வயது போன்ற அடிப்படை தகவல்களை உள்ளிட தேவையில்லை. இதனால் டிக்கெட் முன்பதிவு நேரம் மிச்சமாகும்.
பழைய இணையதளம் நிமிடத்திற்கு சுமார் 32,000 டிக்கெட்டுகளை மட்டுமே கையாண்ட நிலையில், புதிய இணையதளம் நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை பதிவு செய்யும் திறன் கொண்டது. மேலும், ஒரு நிமிடத்திற்கு 40 லட்சம் Enquiries-களை கையாளும் வகையில் சர்வர் மேமபடுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் தேவைக்கேற்ப இருக்கையை தேர்வு செய்யும் வசதி மற்றும் பயணத் தேதிக்கேற்ப கட்டணத்தை ஒப்பிட்டு பார்க்கும் வசதி ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே வயதானவர்கள், பெண்கள் முன் கூட்டியே கீழ் இருக்கைகளை தேர்வு செய்யலாம், அதே போல தேதிக்கேற்ப கட்டணம் காட்டப்படுவதால் அதற்கேற்ப பயண திட்டத்தை முடிவு செய்து கொள்ளலாம்.
பல மொழி பேசும் பயணிகளும் தங்களின் தாய்மொழியிலேயே இணையதளத்தை பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் ஆங்கிலம் இல்லாமல் தங்கள் மொழியிலேயே அணுகி டிக்கெட் பதிவு செய்யலாம்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இணையதளம் பீட்டா பதிப்பாகும். அதாவது, பொதுமக்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி பார்த்து, அதில் ஏதேனும் குறைகள் அல்லது ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். பயனர்களின் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த சில வாரங்களில் முழுமையான மற்றும் இறுதி செய்யப்பட்ட இணையதளம் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சகம் கூறுகிறது.
இனி ரயில் டிக்கெட் பதிவு செய்து எளிமையாகவும் வேகமானதாகவும் மாறும். இதற்கு முன்பு சர்வர் பிரச்சினையில் பஃபர் ஆகி கொண்டே இருக்கும், இதனால் பல சமயங்களில் நமக்கான டிக்கெட்டே கிடைக்காமல் போய்விடும். அதே போல கேப்சா உள்ளீடு எரிச்சலூட்டும் வகையில் இருந்தது அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி தளத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றம், குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலங்களில் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை தரும்.
