ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப்பில் காட்டுவது செல்லாது – ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை!!
ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. வழக்கமாக நாம் ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப்பிலும், ஸ்கிரீன் ஷாட்டாகவும் டிக்கெட் பரிசோதகரிடம் காட்டுவோம். அவரும் அதனை சரிபார்த்து ஏற்று கொள்வார். ஆனால் இனி போனில் வாட்ஸ் அப் மற்றும் ஸ்கிரீன் ஷாட், புகைப்படம் ஆகிய முறைகளில் டிக்கெட்டை காட்டுவது செல்லாது என ரயில்வே அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்படாத (Unreserved) ரயில் டிக்கெட்டுகளை சரிபார்க்கும் முறையில் ரயில்வே நிர்வாகம் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. அண்மையில் ராய்ப்பூர் ரயில் நிலையத்தில், பெண் பயணி ஒருவர் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கேட்டபோது, தனது மொபைலில் இருந்த ‘வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்’ டிக்கெட்டை காண்பித்துள்ளார். ஆனால், அந்த டிக்கெட் செல்லாது என தெரிவித்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது டிக்கெட் வாங்கப்பட்ட நேரம் 4.45 மணி, ஆனால் ரயில் 4.10 மணிக்கே புறப்பட்டுவிட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் சகோதரர் ரயில் டிக்கெட் பதிவு செய்து இவருக்கு அனுப்பியது தெரிய வந்தது. இருந்தாலும் ஃபார்வேர்டு டிக்கெட் என கூறி அவருக்கு அபராதம் விதித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டிஜிட்டல் டிக்கெட் சரிபார்ப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் இனி RailOne போன்ற அதிகாரப்பூர்வ ரயில்வே செயலிகள் வாயிலாக மட்டுமே டிக்கெட்டை காண்பிக்க வேண்டும். அதாவது டிக்கெட் பரிசோதகர் கேட்டுகும் போது உங்கள் போனில் ரயில் ஒன் செயலியை திறந்து அதில் உங்கள் டிக்கெட்டை காட்ட வேண்டும். இதனை Original Digital Ticket என அழைக்கும் ரயில்வே நிர்வாகம் இப்படி காட்டப்படும் டிக்கெட்டுகள் மட்டுமே செல்லும் என தெரிவித்துள்ளது.
இனி டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட்கள் , வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட டிக்கெட் நகல்கள், புகைப்படங்கள் (அல்லது PDF கோப்புகளை டிக்கெட் பரிசோதகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் பதிவு செய்த அதே மொபைல் எண்ணில், அதே செயலியில் டிக்கெட் இருக்க வேண்டும். மற்றவர் முன்பதிவு செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்புவது செல்லாது என தெரிவித்துள்ளது.
இந்த விதிகளை மீறினால், அந்த பயணி முறையான டிக்கெட் இல்லாதவராக கருதப்படுவார். அவ்வாறு கருதப்படுபவர்களுக்கு ரயில்வே விதிகளின்படி 500 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை தவறாக பயன்படுத்துவது, ஒரே டிக்கெட்டை பலருக்கு பகிர்வது மற்றும் போலி ஸ்கிரீன்ஷாட்கள் மூலம் ஏமாற்றுவது போன்ற செயல்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
எனவே அன்ரிசர்வ்டு டிக்கெட்டில் பயணம் செய்வோர் இனி எப்போதும் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போனுடன் பயணிக்க வேண்டும். ரயில் ஒன் அதிகாரப்பூர்வ செயலியை போனில் வைத்திருக்க வேண்டும். பரிசோதகர் கேட்கும் ரயில் ஒன் செயலியில் டிக்கெட் காட்ட வேண்டும். இந்த விதி முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இருந்தாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியாதவர்கள், முதியவர்களுக்கு இந்த விதிமுறை சிக்கலை ஏற்படுத்தலாம்.

