Last Updated:
உச்சநீதிமன்றம் ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து, விரிவான அறிக்கை தருமாறு உத்தரவிட்டு, 1ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைத்தது.
ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பதில் அளிக்க கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, மகாதேவன் அமர்வில் ரயில்வே நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது. அதனை பார்த்த நீதிமன்றம், எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவு இல்லை என்றும் நீதிமன்றத்தை குழப்பும் விதமாக அறிக்கை உள்ளது என்றும் தெரிவித்தது.
நீதிமன்றத்தை முட்டாளாக்க கூடாது என்றும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளது செயலில் இல்லை என்றும் கூறியது. டெல்லி, பாட்னா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், நடைமேடைகளுக்கு செல்வது மிக சிரமமாக உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், பயணிகள் பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே ரயில்வே துறை வளரும் என்று தெரிவித்தனர்.
சாதாரண பெட்டிகளில் பயணிகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது முக்கியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. இறுதி வாய்ப்பாக ஒருமாத அவகாசம் தருவதாக கூறிய நீதிமன்றம், பயணிகள் பாதுகாப்புக்கான திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எந்தெந்த திட்டங்களுக்கு நிதி செலவிடப்படுகிறது என்பதை விரிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


