Last Updated:
AI கேமராக்கள் மற்றும் ‘ஒயிட்டோ-மீட்டர்கள்’ (Whito-Meters) பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சோதனைகளும் ரயிலில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்திய ரயில்வேயின் ஏசி ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 2 போர்வைகள், ஒரு தலைகாணி உறை மற்றும் ஒரு கைத்துவாலை வழங்கப்படுகின்றன. ஏசி வகுப்புகளுக்கான பயணக் கட்டணத்திலேயே இதற்கான தொகையும் அடங்கியுள்ளது. ஆனால், எதற்காக ஒரு பயணிக்கே இரண்டு போர்வைகள் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி பலருக்கும் இருப்பதுண்டு.
இரண்டு போர்வைகள் வழங்கப்படுவதற்கு ஆரோக்கியம் மற்றும் தூய்மை சார்ந்த முக்கியக் காரணத்தை ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு போர்வை படுக்கும் இருக்கையின் மீது விரிப்பதற்காகவும் (Sleeper seat), இரண்டாவது போர்வை கம்பளிக்கு (Blanket) அடியில் தங்களைப் போர்த்திக் கொள்வதற்காகவும் வழங்கப்படுகிறது.
கம்பளி நேரடியாகப் பயணியின் உடலில் படாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அடுக்காக (Sanitary layer) இந்த இரண்டாவது போர்வை செயல்படுகிறது. ஒவ்வொரு முறை பயன்படுத்தப்பட்ட பிறகும் இந்த போர்வைகள் துவைக்கப்படுகின்றன.
மேலும், கம்பளிகளை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே துவைக்கும் நடைமுறை இருப்பதால், சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமேற்கு ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களிலும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள காமாக்யா – ஹவுரா வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலிலும் கம்பளி உறைகள் (Blanket covers) வழங்கும் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ரயில்வே உடைகளின் தூய்மையைக் கண்காணிக்கவும் தடிமனான கறைகளைக் கண்டறியவும் புனே, ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் பிரிவுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மற்றும் ‘ஒயிட்டோ-மீட்டர்கள்’ (Whito-Meters) பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.


