கெமாமான்:
திரெங்கானு மாநிலத்தில், ரம்புத்தான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் ஒருவன் அதன் விதை தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெமாமான், ஃபெல்டா நெராம் 1 (Felda Neram 1) பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், நேற்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் தனது 6 வயது சகோதரியுடன் சேர்ந்து ரம்புத்தான் பழங்களைச் சாப்பிட்டுள்ளான். சகோதரி பழத்தின் தோலை உரித்துக் கொடுக்க, அதனைச் சாப்பிட்டபோது எதிர்பாராதவிதமாக ஒரு. விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியது.
சிறுவனால் பேசவோ, சுவாசிக்கவோ முடியாமல் தவிப்பதைக் கண்ட குடும்பத்தினர், அவனை உடனடியாக கெமாமான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 2.50 மணியளவில் அவன் உயிரிழந்தான்.
இதுகுறித்து கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடெண்டண்ட் முகமட் ராசி ரோஸ்லி கூறுகையில், “பிரேதப் பரிசோதனையில் சிறுவன் மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவனது சுவாசக் குழாயில் ரம்புத்தான் பழத்தின் விதை சிக்கியிருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
ரம்புத்தான், நெல்லிக்காய், திராட்சை போன்ற பழங்கள் சிறிய குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான ‘மூச்சு அடைப்பை’ (Choking Hazard) ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கப் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றார்.
அதாவது பழங்களைச் சிறிய துண்டுகளாக வெட்டுங்கள், சிறிய குழந்தைகளுக்கு ரம்புத்தான், லோங்கன் போன்ற பழங்களை அப்படியே கொடுக்க வேண்டாம், மேலும் விதையை நீக்கிவிட்டு, பழத்தின் சதையை மட்டும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொடுக்குமாறும் அவர் கூறினார்.




