Last Updated:
முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் தனது பெங்களூரு வீட்டில் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் தனது இல்லத்தில் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டு இறந்துள்ளார். இது தற்போது கர்நாடகா மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் டிஜிபியான ஓம் பிரகாஷ் தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர். லேயோட் பகுதியில் உள்ள தனது மூன்று மாடி வீட்டில் வசித்துவருகிறார். இவருடன் தனது மனைவி பல்லவி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில், ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி இன்று மாலை அப்பகுதி காவல்துறைக்கு போன் செய்து, தனது கணவர் வீட்டில் இறந்து கிடப்பதாக தகவல் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மரணம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர்.
இதையும் படியுங்கள் : சொத்தை அபகரிக்க மனைவி போட்ட பிளான்.. விபரீத முடிவு எடுத்த கணவன்.. போலீஸ் கையில் கிடைத்த முக்கிய ஆதாரம்!
அங்கு அந்த வீட்டின் தரை தளத்தில், முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் உயிரற்று கிடந்துள்ளார். உடனே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஓம் பிரகாஷின் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது முதற்கட்டமாக காவல்துறையினர் அவரது மனைவி பல்லவி மற்றும் அவரது மகள் ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், தனது உயிருக்கு தனது நெருங்கிய குடும்பத்தினர் வட்டத்தில் இருந்தே அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். விசாரணையின் முடிவில், பிரேதப் பரிசோதனையின் முடிவிலும் ஓய்வுப் பெற்ற டிஜிபி ஓம் பிரகாஷின் மரணத்திற்கான காரணமும், அவர் எப்படி மரணித்தார் என்பதும் தெரியவரும்.
April 20, 2025 8:18 PM IST

