புதுடெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு தப்பியோடுவது முறியடிக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் கடந்த 3 மாதங்களாக இந்திய ராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் ஈடுபட்டு வந்தன.
இதனிடையே, ஜம்மு – காஷ்மீரில் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் மாநில போலீஸார் இணைந்து நடத்திய `ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் சுலைமான் என்கிற ஃபைசல், ஹம்சா அப்ஹான், ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக பஹல்காம் தாக்குதலில் இவர்கள் 3 பேரும் ஈடுபட்டதை உறுதி செய்வதற்காக, சண்டிகரிலுள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.
அவர்கள் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதை உறுதி செய்த பின்னரே தகவலை நாடாளுமன்றத்தில் அவர் அறிவித்தார் என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வட்டாரங்கள் தெரிவித்தன.
அதுமட்டுமல்லாமல், ஆபரேஷன் மகாதேவின்போது தீவிரவாதிகளிடமிருந்து கிடைத்த ஆயுதங்கள், துப்பாக்கிகள் ஆகியவற்றை சண்டிகர் ஆய்வகத்தில் ஆய்வு செய்தனர். அந்த துப்பாக்கிகளில் இருந்து அப்போது குண்டுகள் சுடப்பட்டு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது வெளியான காலி தோட்டாக்களையும், பஹல்காமிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கண்டெடுக்கப்பட்ட காலி தோட்டாக்களையும் ஒப்பிட்டு பார்த்தபோது அவை ஒரே துப்பாக்கியில் இருந்து வந்தவை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஆபரேஷன் மகாதேவில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர், எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தப்பிக்க அமைத்து வைத்திருந்த ரகசிய சுரங்கங்களைக் கண்டறிந்தனர். இதையடுத்து சுரங்கப் பகுதியில் அவர்கள் பள்ளம் தோண்டி, ரகசிய வழிகளில் வெள்ள நீர் வருமாறு செய்துவிட்டனர். இதனால் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பியோட முடியாதபடி தடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர் என்று என்ஏஐ வட்டாரங்கள் தெரிவித்தன.