Last Updated:
திரௌபதி முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் குடியரசுத் தலைவர் ஆனார்; அம்பாலாவில் விமானப்படை வீரர்கள் மரியாதை வழங்கினர், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை.
ஹரியானாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம் மேற்கொண்டார்.
எதிரிப்படைகளுக்கு சிம்மசொப்பனமாக இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானம் விளங்கி வருகிறது. இந்த நிலையில், ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்திற்கு வந்த திரௌபதி முர்முவுக்கு விமானப்படை வீரர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
ஏற்கனவே தயாராக இருந்த ரஃபேல் போர் விமானம் முன்பு ராணுவ உடையில் நின்று அவர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பின்னர், குரூப் கேப்டன் அமித் கெஹானி இயக்க, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் ரஃபேல் போர் விமானம் வானில் சீறிப்பாய்ந்தது.
இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங், மற்றொரு ரஃபேல் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்ற ரஃபேல் விமானம் சுமார் 30 நிமிட பயணத்துக்கு பிறகு தரையிறங்கியது. இதன் மூலம், ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அசாமின் தேஸ்பூரில் சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பயணம் செய்தார். இவருக்கு முன்பு, சுகோய் போர் விமானங்களில் ஏபிஜே அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல், ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தபோது பயணம் செய்துள்ளனர்.
ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் தசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் விமானப்படையில் முதன்முறையாக 5 ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. தற்போது இந்தியா வசம் 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ள நிலையில், இவற்றை பயன்படுத்தி தான் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த நிலையில், திரௌபதி முர்முவின் ரஃபேல் பயணம், பாகிஸ்தானுக்கு கொடுக்கும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
October 29, 2025 3:32 PM IST


