ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கட்சியைப் பலப்படுத்தும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், விசேட பயிற்சிப் பட்டறையொன்று வெள்ளிக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் பாராடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, மாத்தறை மாவட்டத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான புத்திக பத்திரன மற்றும் டி.எஸ். சேனநாயக்க ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் அருந்தவநாதன் அனோசன் (யாழ். மாவட்ட அமைப்பாளர்), தொகுதி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் இணைந்திருந்தனர்.
கட்சியின் அடிமட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, புதிய அரசியல் சவால்களை எதிர்கொள்வது மற்றும் யாழ். மாவட்டத்தில் கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பது போன்ற நோக்கங்களை மையமாகக் கொண்டே இந்தப் பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.













