உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். குடியரசு மாளிகையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற டி.ஒய். சந்திரசூட் நேற்று (10ம் தேதி) ஓய்வு பெற்றார். இவர் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை பரிந்துரை செய்தார். அதன்படி இன்று புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் அடுத்த 6 மாதத்திற்கு அதாவது 2025ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
யார் இந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா:
1960ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி பிறந்த சஞ்சீவ் கண்ணா, டெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். 1983ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரிவிதிப்பு, நடுவர் மன்றம், வணிகச் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், மருத்துவ அலட்சியம் சட்டம் மற்றும் நிறுவனச் சட்டம் ஆகியவற்றைப் பயிற்சி செய்தார்.
பிறகு டெல்லி அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய சஞ்சீவ் கண்ணா, 2005ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்று பணியாற்றினார்.
2019ம் ஆண்டு அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியத்தின் பரிந்துரையின்படி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் முக்கிய வழக்குகள்:
2024ல் விவிபேட்டில் இருக்கும் வாக்குகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டு மனு மீது அளித்த தீர்ப்பில், “தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்களுக்கு இவிஎம்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
2024ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் தேர்தல் பத்திரம் தொடர்பான மனு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த அமர்வில் இருந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “நிதி வழங்குபவர்களின் தனியுரிமை வங்கிகள் மூலம் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு நீட்டிக்கப்படாது. நிதி வழங்கியவர்களின் அடையாளங்கள் பத்திரங்களைக் கையாளும் வங்கி அதிகாரிகளுக்கு ஏறக்குறைய தெரியும்” எனத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை சமரசம் செய்யாது” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் :
பாலியல் வழக்கு; ஜாமீன் கோரிய பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய அமர்விலும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா இருந்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
