International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியன் இறுதிச் சடங்கு பல மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் நடந்தது. அதில் மாஸ்க் அணிந்து பங்கேற்ற ஒரு மர்ம நபர் குறித்து இணையத்தில் மிக பெரிய பேசுபொருள் ஆனது. அவர் யார் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்த நிலையில், அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்கா ஈரான் இடையே வெடித்த மோதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதலிலேயே அலி கமேனி கொல்லப்பட்டார். அதன் பிறகும் பல மாதங்கள் மோதல் தொடர்ந்ததால் அலி கமேனி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படவில்லை.

மர்ம நபர்
இந்தச் சூழலில் தான் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு கமேனியின் இறுதி சடங்கு தெஹ்ரானில் நடந்தது. அதில் மிக பெரிய மக்கள் கூட்டம் கலந்து கொண்டது. சுமார் 4 கோடி மக்கள் இதில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான போட்டோக்கள் வெளியான நிலையில், அதில் ஒரு குறிப்பிட்ட விஷயம் மிக பெரியளவில் பேசுபொருளானது.
அதாவது இறுதி அஞ்சலி நிகழ்வில், கருப்பு நிற மாஸ்க் மற்றும் கருப்பு பேஸ்பால் தொப்பி அணிந்த ஒருவர் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அவரது இந்த கெட்-அப் பெரும் கவனத்தை ஈர்த்தது. அவர் யார் என்பதில் விவாதம் ஏற்பட்டது. சிலர் அவர் உளவாளி என்றெல்லாம் கூட சொன்னார்கள். இந்தச் சூழலில் தான் அதற்கான பதில் கிடைத்துள்ளது. அந்த மாஸ்க் நபர் கமேனியின் மூத்த பேரனான முகம்மது ஜவாத் காமெனி என்பது தெரிய வந்துள்ளது.
யார் அவர்?
இந்த முகம்மது ஜவாத் காமெனி, மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மூத்த மகனான முஸ்தபா கமேனியின் மகன் ஆவார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலின் போது ஜவாத்தும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஜவாத்தின் முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இறுதிச்சடங்கில் அவர் தனது முகத்தைக் கருப்பு மாஸ்க்கால் மறைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
உச்ச தலைவர்
இது ஒரு பக்கம் இருக்க மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மகனான மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது அமெரிக்காவின் தாக்குதலில் மொஜ்தபா காமெனி கடுமையாக காயமடைந்ததாகவும் அவரது முகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்றபோது அவர் தனது தந்தையுடன் அதே வளாகத்தில் இருந்ததாகவும், ஆனால் வேறு ரூமில் இருந்ததால் உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலி கமேனி உயிரிழப்புக்கு பிறகு இந்த மொஜ்தபா கமேனி தான் அடுத்த உச்ச தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பல மாதங்கள் ஆகியும் இதுவரை மொஜ்தபா கமேனி பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. அவரது அறிக்கைகள் மட்டுமே ஈரான் அரசு ஊடகங்கள் மூலம் வெளியாகி வருகிறது. இதனால் அவர் எங்கு இருக்கிறார்.. அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதில் தெளிவு இல்லை.
இறுதி சடங்கு
மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியை பொறுத்தவரை அவரது உடல் நாடு முழுவதும் ஆறு நாட்கள் எடுத்து செல்லப்பட்டது. இறுதியில் வியாழக்கிழமை அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அமெரிக்காவுடன் போர் நடந்தபோது இறுதிச்சடங்கு நடத்த முடியாது என்பதால் அவரது உடல் நான்கு மாதங்களுக்கு மேலாக குளிர்சாதன வசதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



