யாரையும் பிடித்து சிறை வைக்கலாம்? CJP போராட்டத்துக்கு மத்தியில் டெல்லி போலீசுக்கு சிறப்பு அதிகாரம்?
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
தலைநகர் டெல்லியே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவ, மாணவிகள் , சமூக ஆர்வலர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு காவல் ஆணையர் அனுராக் குமாருக்கு, துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து அனுமதி அளித்துள்ளார். இந்த சட்டத்தை ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18,2026 வரையிலான மூன்று மாத காலத்துக்கு அமல்படுத்துவதற்கான அதிகாரம் காவல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டம் 1980-ன் கீழ், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ,ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை, காரணம் கூறாமல் 12 நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம். அதிகபட்சமாக ஓராண்டு வரை இந்த சிறையை நீட்டிக்கலாம் என்ற அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்படுகிறது.
இது வழக்கமான குற்றவியல் வழக்கு நடைமுறைகளிலிருந்து மாறுபட்டது என சொல்லப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபர் கைது செய்யப்பட்டால், உடனடியாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. கடுமையான சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடுவார்கள் என காவல்துறையினர் அடையாளம் காணும் எவரையும் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய இது வழி வகை செய்கிறது.
பொதுவாக மாவட்ட ஆட்சியர்கள் அல்லது காவல் ஆணையர்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.இதற்கிடையே தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டதற்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
வழக்கமாக டெல்லி காவல்துறைக்கு வழங்கப்படும் அதிகாரம் தான் இது. இந்த போராட்டம் காரணமாக சிறப்பு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்படுவது உண்மையில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி நீட்டிப்பானது, போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஜூலை 7 ஆம் தேதியே வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
A routine quarterly renewal of powers under the National Security Act (NSA) has been falsely linked to the ongoing CJP protests.
The renewal predates the protests and is part of the standard administrative process.
Citizens are advised to rely only on official information and… pic.twitter.com/t50ABgZBh0
— Delhi Police (@DelhiPolice) July 23, 2026 “>
முன்னதாக நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, மாணவர்கள் தற்கொலை ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள் கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த முயன்ற இளைஞர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைக்க முயன்றனர்.
இதனை அடுத்து நாடு முழுவதும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. எதிர்க்கட்சிகளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் யாரையும் விட மாட்டோம் என்றும் கூறி இருந்தார்.

