Last Updated:
ஒவ்வொரு வருடமும் வருமான வரி செலுத்துவது என்பது பலருக்கு பெரும் சுமையாக அமைகிறது. ஆனால் புதிய விதிகளின் கீழ், நீங்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் வருமான வரி செலுத்துவது என்பது பலருக்கு பெரும் சுமையாக அமைகிறது. ஆனால் புதிய விதிகளின் கீழ், நீங்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சரியாக திட்டமிட்டால் உங்களுடைய வரி பில் என்பது பூஜ்ஜியமாக இருக்கும். எனவே அடுத்த முறை உங்களுடைய வருமான வரியை தாக்கல் செய்யும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேர்வு செய்வதற்கு கிடைக்கும் இரண்டு வரி விதிப்பு முறைகள்:
இப்போது வரி செலுத்துவோர் கிடைக்கக்கூடிய இரண்டு வரி விதிப்பு முறைகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். பழைய வரி விதிப்பு முறை என்பது பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் ஒன்று. அதில் வீட்டு வாடகை, இன்சூரன்ஸ், வீட்டு கடனுக்கான வட்டி மற்றும் பிரிவு 80Cன் கீழ் செய்யப்படும் முதலீடுகள் போன்ற பல்வேறு விதமான பிடித்தங்கள் மற்றும் விலக்குகள் உள்ளது. இது உங்களுடைய வரிக்கு உட்பட்ட வருமானத்தை குறைத்து காட்டுவதற்கு உதவும்.
புதிய வரி விதிப்பு முறை: குறைவான வட்டி விகிதங்கள், குறைவான சிக்கல்:
புதிய வரி விதிப்பு முறை என்பது சற்று வித்தியாசமாக இயங்குகிறது. இது குறைவான வட்டி விகிதங்களை வழங்கினாலும் பெரும்பாலான பிடித்தங்கள் இந்த முறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தாக்கல் செய்யும்போது அனைத்து விஷயங்களையும் எளிமையாக்கி, உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்தோடு இது செய்யப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் புதிய வரி விதிப்பு முறை என்பது பலருக்கு நன்மை தரும் ஒன்றாக அமைந்துள்ளது.
2025 பட்ஜெட்டை வெளியிட்ட போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மிகப்பெரிய ஒரு நல்ல செய்தியை அறிவித்தார். அதாவது புதிய வரி விதிப்பு முறையின் கீழ் உங்களுடைய வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை இருந்தால் நீங்கள் எந்த ஒரு வருமான வரியையும் செலுத்த தேவையில்லை. மேலும் மாத வருமானம் பெறும் வரி செலுத்துவோருக்கும் கூடுதல் பலன்கள் கிடைத்துள்ளது. முன்னதாக 50,000 ரூபாயாக இருந்த நிலையான பிடித்தம் என்பது புதிய வரி விதிப்பு முறையின் கீழ் 75,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மாத வருமானம் பெறும் நபர்களை பொறுத்தவரை 12.75 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை.
பழைய வரி விதிப்பு முறையில் ஹோம் லோன்கள், இன்சூரன்ஸ் பாலிசிகள் அல்லது பெரிய அளவிலான முதலீடுகளுக்கு பலன்கள் கிடைக்கிறது. இதில் இருக்கக்கூடிய மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் வயதை பொறுத்து வரி இல்லாத உச்சவரம்பு என்பது மாறுபடும். ஒருவேளை நீங்கள் 60 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு நீங்கள் வரி செலுத்த தேவையில்லை. மேலும் 60 முதல் 79 வயதுக்கு உட்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கான உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக அமைக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு இது 5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே எந்த வரி விதிப்பு முறையை தேர்வு செய்ய வேண்டும்?
இதற்கான பதில் என்பது பழைய முறையின் கீழ் உங்களால் எத்தனை பிடித்தங்களை கிளைம் செய்ய முடியும் என்பதை பொறுத்து அமையும். ஒருவேளை உங்களிடம் அதிக அளவு வரி சேமிப்பு முதலீடுகள் அல்லது செலவுகள் இருந்தால் பழைய வரி விதிப்பு முறை உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
அதே சமயத்தில் குறைவான படிவங்கள் மற்றும் ஆவணங்களை விரும்பும் நபர்களுக்கு புதிய வரி விதிப்பு முறை எளிமையான ஆப்ஷனாக இருக்கலாம். ஆனால் இதில் வரி இல்லாத வருமான வரம்பு என்பது சற்று அதிகமாக இருக்கும். எனவே வருமான வரியை தாக்கல் செய்வதற்கு முன்பு சிறிது நேரம் எடுத்துக்கொண்டு இரண்டு ஆப்ஷன்களையும் ஒப்பிட்டு பாருங்கள். சிறிதளவு திட்டமிடல் மூலமாக சட்டத்திற்கு உட்பட்டு உங்களால் பூஜ்ஜிய வரி மூலமாக பெரிய அளவு பணத்தை சேமிக்க முடியும்.
July 13, 2025 7:32 PM IST


