லசந்த விக்கிரமதுங்க படுகொலை
செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், முறையான விசாரணைகள்
முன்னெடுக்கப்படாமை குறித்து அவரது சகோதரரும் ‘சண்டே லீடர் பத்திரிகையின் இணை
நிறுவனருமான லால் விக்ரமதுங்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
லசந்தவுக்காக நாம்’ அமைப்பின் சார்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அன்று மோட்டார் சைக்கிளில் வந்து லசந்தவைச் சுட்டது யார் என்பது எமக்கும்
தெரியும், காவல்துறையினருக்கும் தெரியும்.
நுணுக்கமான கொலை
ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
காவல்துறையினர் நினைத்தால் நுணுக்கமான கொலைகளைக் கூட ஓரிரு நாளில் கண்டுபிடித்து
விடுவார்கள்.

ஆனால் இதில் ஏன் மௌனம்?
லசந்தவின் நாட்குறிப்பை எடுத்துச் சென்ற முன்னாள் பிரதிப் காவல்துறை மா அதிபர்
மற்றும் சாட்சிகளை மாற்றியமைத்த முன்னாள் காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு எதிராக
ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
காரணமின்றி கொலை செய்பவர்கள் ஒருபோதும் மாவீரர்கள் (ரணவிருவோ) ஆக முடியாது.
அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக இராணுவத்தின் ஒரு சிறு குழு செய்த தவறுகளை
மறைத்து அவர்களைக் காப்பாற்றுகின்றனர். இதனைத் திருத்தாமல் நாடு முன்னேறாது.”
– என்றார்.
எவரும் தண்டிக்கப்படவில்லை
லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர் என்றும்,
சாட்சிகள் இருந்தும் ஏன் எவரும் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர் ஆதங்கம்
வெளியிட்டார்.

லசந்த சர்வதேச அளவில் வீரராகப் போற்றப்படும் நிலையில், சொந்த நாட்டிலேயே அவர்
கொல்லப்பட்டதும் பத்திரிகை நிறுவனம் எரிக்கப்பட்டதும் வெட்கப்பட வேண்டிய
விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தபோது, இது குறித்து உரிய நடவடிக்கை
எடுப்பதாக அவர் உறுதியளித்ததாகவும், அந்த நம்பிக்கையில் தான்
காத்திருப்பதாகவும் லால் விக்கிரமதுங்க மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

