ஊழல் வழக்குகளில் சிக்கிய 25 பேர் பாஜகவில் சேர்ந்த பிறகு, சிலர் மீதான வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதோடு, பலரின் மீதான விசாரணை நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த, 2014ஆம் ஆண்டு முதல் ஊழல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த வழக்குகளில் சிக்கிய முக்கிய தலைவர்கள் பலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அது குறித்து ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது, பிரபல ஆங்கிலப் பத்திரிகை. அதாவது, ஊழல் மற்றும் லஞ்சம் பெற்ற புகாரில் 25 முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள் மீது அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்தன. ஆனால், அவர்கள் பாஜகவில் இணைந்த பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறது அந்த கட்டுரை.
குறிப்பாக, ஊழல் வழக்குகளுக்கு பயந்து அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். அதேபோல், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவில் இருந்து தலா 4 பேரும், திரிணாமுல் காங்கிரசில் இருந்து 3 பேரும், பாஜகவில் சேர்ந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 2 பேரும், சமாஜ்வாதி, ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா ஒருவரும் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
பாஜகவில் சேர்ந்ததால் 25 பேரில் அஜித் பவார், பிரபுல் பட்டேல் உள்ளிட்ட 12 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் முக்கியமான தகவல். 2019 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவார், அஜித் பவார் மீது பண மோசடி வழக்குகளை பதிவு செய்தது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ். Nationalist congress party என்ற அக்கட்சியை, Naturally corrupted party என்று பிரதமர் மோடி அப்போது விமர்சித்தார். அந்த வழக்கை 2022 ஏப்ரலில் அமலாக்கத்துறை விசாரிக்க தொடங்கிய நிலையில், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் உடைத்தார்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே உடைத்து, பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்த நிலையில், அந்த கூட்டணியில் அஜித் பவார் இணைந்து கொண்டார். அதன்பிறகு இந்த வழக்கில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் முடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Also; மத்திய அமைச்சர் அமித் ஷா-வின் இன்றைய தமிழ்நாட்டுப் பயணம் திடீர் ரத்து
அதேபோல், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பிரபுல் படேல், விமானங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக, 2019ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, 2023 ஜூன் மாதத்தில் பாஜகவில் அவர் சேர்ந்த பிறகு, பிரபுல் படேல் மீதான வழக்கு இன்னும் நிலுவையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
2014-15ஆம் ஆண்டுகளில் அசாமில் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் சிக்கிய ஹிமந்த பிஸ்வா சர்மா, கடந்த 2015ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். அசாமில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமைச்சராக இருந்த ஹிமந்த பிஸ்வா சர்மா, பாஜகவில் இணைந்தபிறகு அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், தற்போது அசாம் மாநிலத்தில் பாஜகவின் முதலமைச்சராகவும் இருக்கிறார்.
இதேபோல், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கடந்த 2022 பிப்ரவரியில் மகாராஷ்டிர சிவசேனா எம்.எல்.ஏ. யாமினி மற்றும் அவரது கணவருக்கு தொடர்புடைய நிறுவனங்கள் மீது வருமானத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் வழக்குப் பதிவு செய்தன. அதே ஆண்டில் ஜூன் மாதத்தில் அவர் பாஜக கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்தபிறகு, அந்த வழக்குகள் அப்படியே உறக்க நிலைக்கு சென்றுவிட்டன.
மேற்கு வங்கத்தில் 2017ஆம் ஆண்டு சாரதா மோசடி வழக்கில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுவேந்து அதிகாரி மீதான விசாரணை தீவிரமான நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு அந்த விசாரணை என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. இவ்வாறு, பாஜகவில் இணைந்த 25 பேரில் 3 பேர் மீதான ஊழல் வழக்குகள் முழுமையாக மூடப்பட்டதோடு, 20 பேர் மீதான வழக்குகள் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. எஞ்சிய 2 பேர் மீதான வழக்குகள் மட்டுமே விசாரணையில் இருந்தாலும், அதுவும் மந்த கதியிலேயே நடந்து வருவதாக, ஆதாரங்களை அடுக்கியுள்ளது அந்த ஆங்கில நாளேடு..
இந்த கட்டுரை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருப்பதற்கு, இதைவிட சான்று வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், E.D, IT, CBI ஆகியவை தான் பிரதமர் மோடியின் குடும்பம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் பாஜகவில் இணைந்தால் மோடி வாஷிங்மெஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளதாகவும் சாடியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
