இதன் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் சேர்த்தன. ஆறு ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி 137 ரன்கள் குவித்தார்.
அவரைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 118 ரன்கள் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொதப்பியதால் 364 ரன்களில் இந்திய அணி சுருண்டது. 370 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, போட்டியின் கடைசி நாளான நேற்று, விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் என்ற ஸ்கோருடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
தொடக்க வீரர்கள் ஷேக் கிராவ்லே 65 ரன்களும், பென் டக்கட் 149 ரன்களும் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தனர். அடுத்த வந்த ஜோ ரூட் நிதான விளையாடி ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் கொண்டு வந்தார்.
82 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாகவே அமைந்தது. இதனால் முதல் டெஸ்டை இந்தியா கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் சில மோசமான வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதாவது, டெஸ்ட் தொடர் வரலாற்றிலேயே 5 தனிநபர் சதங்களுக்குப் பிறகு தோல்வியடைந்த ஒரே அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி பெற்றுள்ளது. கேஎல்.ராகுல், ரிஷப் பந்து (2 முறை), ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் சதங்களை அடித்து அசத்தியபோதும் பயனில்லாமல் போனது.
இந்தியா 370 என்ற இலக்கை நிர்ணயித்தபோது, இரு அணிகளுக்கு இடையிலான கடுமையான போட்டியாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், எளிதாக இங்கிலாந்து அணி ஆட்டத்தை இந்தியாவிடமிருந்து பறித்துக்கொண்டது. அதற்கு காரணம் வலுவான அடித்தளம் அமைத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்.
இந்த தோல்விக்கு மற்றொரு முக்கியமான காரணம் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொத்தபலான ஆட்டம். உதாரணமாக, இந்தியா முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடியிருந்தது.
ஆனால், இன்னிங்ஸ் முடிவதற்குள், இந்தியா 471 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்தது. கீழ்நிலை வீரர்களின் மோசமான ஆட்டத்தை எதிர்காலத்தில் சரிசெய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
June 25, 2025 9:31 AM IST

