Last Updated:
மத்தியப் பிரதேச மாநிலம் காதி குர்த் கிராமத்தில் உள்ள கிராம சாலைகளின் மோசமான நிலையைக் கண்டித்து 8 கர்ப்பிணிப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் காதி குர்த் (Khaddi Khurd) என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமார் எட்டு கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவமனைகளுக்குச் செல்ல ஏதுவாக தார்ச்சாலைகள் அமைக்க வேண்டும் என்று சோஷியல் மீடியா மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி இந்தக் கிராமத்திற்குச் சரியான சாலை இணைப்பு இல்லை, குறிப்பாக இந்தக் கிராமத்தில் தார் சாலைகள் இல்லை. கர்ப்பமாக உள்ள பெண்கள் உட்பட சுகாதார மையங்களுக்குச் செல்ல நினைக்கும் இந்தக் கிராமத்தினர் பலரும் சேறு நிறைந்திருக்கும் மற்றும் சீரற்ற நிலப்பரப்பு வழியாகவே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்தக் கிராமத்தில் வாகனங்கள் செல்லக்கூடிய வகையிலான சாலைகள் இல்லாதது பெரும்பாலும் கர்ப்பத்தின் இறுதி கட்டங்களில் உள்ள பெண்களுக்குக் கடும் சவால்களை உருவாக்குகிறது. இதனால் அருகிலுள்ள சுகாதார மையங்களை அடைய மோசமான பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் தான், காதி குர்த் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள் சிலர் சாலை வசதி கோரி சோஷியல் மீடியாவில் பேசிய விஷயம் நெட்டிசன்கள் கவனத்தை மட்டுமல்ல, அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பல்வேறு பிளாட்ஃபார்ம்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்ட லீலு ஷா, கடந்த 2023ஆம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை டேக் செய்து ஒரு வீடியோவைப் பதிவேற்றியிருந்தார். அதில், “மத்தியப் பிரதேசத்திலிருந்து 29 எம்.பி.க்களையும் வெற்றிபெறச் செய்தீர்கள். இப்போது எங்களுக்கு ஒரு சாலை கிடைக்குமா?” என்று கேட்டிருந்தார். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக Sidhi மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.பி. ஆகியோர் உறுதியளித்தனர். இந்தப் பிரச்சனையை பகிரங்கமாக எழுப்பிய போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதனால் லீலாவும் கிராம மக்களும் மீண்டும் ஒருமுறை குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.
காதி குர்த் கிராமத்தில் உள்ள கிராம சாலைகளின் மோசமான நிலையைக் கண்டித்து 8 கர்ப்பிணிப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவரும், தற்போது ஒன்பதாவது மாத கர்ப்பிணியுமான லீலா சாஹு தான் தலைமை தாங்குகிறார். தற்போதைய போராட்டம் குறித்து பேசிய லீலா மழைக்காலத்திற்குப் பிறகு சாலை கட்டுமானம் தொடங்கும் என்று சித்தி எம்.பி.ராஜேஷ் மிஸ்ரா முன்பு தனக்கு உறுதியளித்ததாக கூறுகிறார். “எம்.பி. தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்திருந்தால், அவர் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நானே மூத்த தலைவர்களை அணுகி இருப்பேன். இங்குள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதாவது நடந்தால், அவரே பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார்.
இதனிடையே வைரலான வீடியோவுக்கு பதிலளித்த பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா, பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவேன். ஒவ்வொரு பிரசவத்திற்கும் ஒரு தேதி உண்டு. நாங்கள் அவர்களை அழைத்து வருவோம் என்று ராஜேஷ் மிஸ்ரா கூறினார். “அவர் விரும்பினால், அவள் எங்களிடம் வரலாம்.
உணவு, தண்ணீர், பராமரிப்பு என அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்குவோம். இந்த விஷயங்களைப் பற்றி பொதுவில் பேசுவது சிறந்ததல்ல” என்றும் கூறினார். வனத்துறையின் ஆட்சேபனைகள் காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருவதாகவும், மேலும் “தேவைப்பட்டால், எங்களிடம் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் உள்ளன” என்றும் குறிப்பிட்டார்.
July 12, 2025 2:37 PM IST


