Last Updated:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா என அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என சந்தேகம் எழுந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் மொஜ்தபா கமேனி மோசமாக சிதைந்துவிட்டதாக பலர் கூறி வருவதாகத் தெரிவித்தார். மொஜ்தபா கமேனி ஒரு காலை இழந்துவிட்டதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில், டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி, ஹோர்முஸ் நீரிணையை மூடவில்லை என்றும் எதிரி நாட்டு கப்பல்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். மேலும் தாங்கள் போர் நிறுத்தத்தைக் கேட்கவில்லை என்றும் இந்த போர் மீண்டும் நிகழாத வகையில் முடிவுக்கு வர விரும்புவதாகவும் அராக்கி தெரிவித்தார்.
மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகம் தனது வான்வெளியை மூடியுள்ளது. துபாய், அபுதாபி விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விமானங்கள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

