Last Updated:
வான்வெளி மூடப்பட்டிருப்பதால், விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் தற்போது வரை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இஸ்ரேல், ஜோர்டான், லெபனான், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் போர்ச் சூழல் நிலவுவதால், அந்த நாடுகளின் வான்வெளிப் பகுதிகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் குறைந்த அளவில் வான்வெளிப் பயன்பாடு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த ரத்து நடவடிக்கைகள், தற்போது 10,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளதால், சர்வதேசப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் வணிக ரீதியாகப் பயணம் செய்பவர்கள் இந்தத் தடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண காலங்களில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்திய விமான நிறுவனங்கள் நாளொன்றுக்கு சராசரியாக 300 முதல் 350 விமானங்களை இயக்கி வந்தன. ஆனால், தற்போதைய பதற்றமான சூழலால் இந்த எண்ணிக்கை 80 முதல் 90 ஆகக் குறைந்துவிட்டது. அதாவது, வழக்கமாக இயக்கப்படும் விமானங்களில் மூன்றில் ஒரு பங்கு கூட தற்போது இயக்கப்படவில்லை.
வான்வெளி மூடப்பட்டிருப்பதால், விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது பயண நேரத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், எரிபொருள் செலவையும் உயர்த்தியுள்ளது.
மேற்காசிய பதற்றத்தால் விமான சேவை கடும் பாதிப்பு.. 10,000-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து..


