Last Updated:
ராஜா ரகுவன்ஷி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவருக்கு, சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து புதுமணத் தம்பதி மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு உற்சாகமாக சுற்றிப்பார்த்தவர்கள் 24 ஆம் தேதி, நோங்கிரியாட் கிராமத்தில் தங்கியிருந்த விடுதியைக் காலி செய்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, இருவரின் செல்போனுக்கும் குடும்பத்தினர் அழைத்தபோது, தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதால் 8 நாட்களுக்குப் பின் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின்பேரில் புதுமணத் தம்பதியை நோங்கிரியாட் பள்ளத்தாக்கு முழுவதும் போலீசார் வலைவீசித் தேடினர். அப்போது, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், இளைஞர் ஒருவரின் உடல் பாதி அழுகிய நிலையில் கிடந்தது.
30 வயதான அந்த நபரின் கையில் ராஜா என டாட்டூ குத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் அது புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் வெள்ளை நிற சட்டை, உடைத்துப்போன செல்போன் கவர், மாத்திரைகளும் கிடந்தன.
இதனால் சோனமிற்கு என்ன நடந்தது என்ற கேள்வியோடு போலீசார் விசாரணையைத் தொடர்ந்தனர். இந்த நிலையில், சோனம் ரகுவன்ஷி உத்தர பிரதேசத்தில் உள்ள காசிப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து டிஜிபி நோங்ராங் கூறுகையில், “சோனம் தான் ஆட்களை வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் உத்தரப்பிரதேசத்தில் ஒருவரும், இந்தூரில் இருவரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
பாதி அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட ராஜா ரகுவன்ஷி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜா ரகுவன்ஷி தலையின் முன்பக்கமும், பின்பக்கமும் தாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
June 09, 2025 6:26 PM IST


