ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக மூடப்படுவதாக ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்படாததைக் கண்டித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று சில கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்வது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
கடற்படை முற்றுகை
அமெரிக்காவின் இந்தக் கடற்படை முற்றுகை முழுமையாக நீக்கப்படும் வரை உலகின் மிக முக்கியமான இந்த எரிசக்தி வழித்தடம் மூடப்பட்டிருக்கும் என IRGC தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் உள்ள எந்தவொரு கப்பலும் தற்போது நங்கூரமிடப்பட்டுள்ள இடத்திலிருந்து நகரக்கூடாது என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை நெருங்க முயலும் கப்பல்கள் எதிரிக்கு ஒத்துழைப்பதாகக் கருதப்படும் என்றும் அத்தகைய விதிகளை மீறும் கப்பல்கள் ஈரானியப் படைகளால் இலக்கு வைக்கப்படும் (Targeted) என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் சர்வதேச வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

