
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த ஈழத் தமிழ் உறவுகளின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள “போய்வாறோம் தாயே” என்ற உணர்வுப்பூர்வமான நினைவுப் பாடல், இன்று (மே 17) மாலை 7:00 மணிக்கு இணையத்தளங்களில் உத்தியோகபூர்வமாக வெளியாகவுள்ளது.
மறக்க முடியாத வலி மற்றும் மறையாத நினைவுகளுடன், ஒரு தேசத்தின் கண்ணீர்க் கதையாக இந்த நினைவுப் பாடல் வடிக்கப்பட்டுள்ளது. கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களின் உணர்வுமிகு வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு, பிரபல இசையமைப்பாளர் சுஹைர் காசிம் (Zuhair Cassim) மெல்லிசை வடிவில் இசையமைத்துள்ளார்.
நாளை (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு, போரில் மடிந்த எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு முழு மரியாதையுடன் சமர்ப்பிக்கப்படும் இந்தப் பாடல், இன்று மாலை 7:00 மணிக்கு ‘Pottuvil Asmin’ உத்தியோகபூர்வ YouTube தளத்தில் (YouTube Premiere) பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.
“போய்வாறோம் தாயே” என்ற இப்பாடலின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போதே உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையேயும் கலை உலகினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

