Last Updated:
இறுதிப்போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடிய மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடிய நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதில் தரவரிசை அடிப்படையில் குவாலிஃபயர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் ஆர்சிபி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. இன்னொரு பக்கம் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து குவாலிஃபயர் 2 போட்டியில் நேற்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத் மைதானத்தில் களம் கண்டன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இவை ஒரு பக்கம் இருந்தாலும், மிக மெதுவாக பந்து வீசிய காரணத்தால் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கும், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2ஆவது முறையாக பஞ்சாப் அணி விதியை மீறியதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 24 லட்சமும், 3 ஆவது முறையாக மும்பை அணி தாமதமாக பந்து வீசியதால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இறுதிப்போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஒரு பக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதனால் நாளை ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
June 02, 2025 7:31 PM IST


