மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்ததில், இரண்டு பேர் பலியாகினர். மிஷ்ரா என்பவரின் குடிசை வீடு மீது பாறைகள் விழுந்ததில், நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் இரண்டு பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மும்பையில் மழை பெய்யத் தொடங்கியது. இன்று காலை வரை நீடித்த இந்த மழையால் தாழ்வான இடங்கள் மட்டுமின்றி நகரமே வெள்ளத்தில் மூழகியது.
மும்பையின் சில பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 200 மிமீ மழை பதிவாகியிருக்கிறது. விக்ரோலி பகுதியில் 285 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

