இந்திய நாடாளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயம். மே 20ம் தேதி மும்பையின் முக்கியமான 6 தொகுதிகள் உட்பட மகாராஷ்டிராவின் 13 தொகுதிகளுக்கான தேர்தல் அமைதியாக நடைபெற்றது. மும்பைவாசிகள் பலரும் ஆர்வமாக வாக்களித்துச் சென்றதை பார்க்க முடிந்தது.
ஏப்ரல் 19, 26, மே 7, 13, மற்றும் 20 என ஐந்து கட்டங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து வந்த தேர்தல் ஒருவழியாக நிறைவுபெற்றது. இந்நிலையில் ஒரு வாக்காளர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் அனைவரும் ஏன் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியத்தையும் உணர்த்தியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, 101 வயது நிரம்பிய முன்னாள் ராணுவ வீரர்.
நாடு முழுவதும் உற்சாகமாக தேர்தல் நடைபெற்று வந்தாலும், நகர்ப்புறங்களில் வாக்கு சதவிகிதம் என்னவோ குறைவாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறவாசிகள் வெளியில் வந்து காத்திருந்து வாக்களிக்க விரும்புவதில்லை. ஆனால் மும்பையில் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த 101 வயது நிரம்பிய முன்னாள் ராணுவ வீரரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வயதிலும் வாக்களிக்க வந்து நாட்டிலுள்ள பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார் இந்த முதியவர். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பெயர் கார்கானிஸ்.
ஏன் இன்று நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. 101 வயது நிரம்பிய ஓய்வுபெற்ற ராணுவ வீரரான கார்கானிஸ், ரஹேஜா கல்லூரியில் உள்ள வாக்கு மையத்தில் தனது வாக்கை செலுத்தி அனைவருக்கும் உதாரணமாக திகழ்கிறார். அவருக்கு எந்த சிரமமும் ஏற்படாதவாறு எங்கள் அதிகாரிகள் பார்த்துக் கொண்டனர் என மும்பை காவல்துறை தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு செய்துள்ளது. இந்தப் பதிவில் அவருடைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
உடனடியாக இந்தப் புகைப்படம் இணையம் முழுவதும் வைரலாகத் தொடங்கியது. இந்த தள்ளாத வயதிலும் வாக்களிக்க வந்ததற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதோடு மட்டுமின்றி நம் நாட்டிலுள்ள பலருக்கும், குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இவர் திகழ்வதாகவும் பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு பெரிய உத்வேகத்தை இவர் கொடுத்துள்ளார் பாருங்கள். என்னுடைய தாத்தாவும் இன்று வாக்களித்துள்ளார். அவருக்கு 98 வயதாகிறது. இந்த சமயத்தில் மும்பை காவல்துறைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஒருவர் இந்தப் பதிவிற்கு தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
முதியவர்களுக்கு உதவி செய்ததற்காகவும், எல்லாவற்றையும் எந்தப் பிரச்சனையும் இன்றி கையாண்டதற்காகவும் மும்பை போலீசாருக்கு எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன் என இன்னொருவர் கருத்துக் கூறியுள்ளார். மும்பை போலீசாரின் இந்தப் பதிவிற்கு தற்போது வரை 39.4K லைக்ஸ் கிடைத்துள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)