சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், ஏன் வரவில்லை? என்ன காரணம்? என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அவமதிக்கப்பட்டாரா, தலைமை நீதிபதி?
மும்பை தாதரில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, கடந்த ஞாயிறன்று, நாட்டின் 52-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றிருக்கும் பி.ஆர். கவாய் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தின் மும்பைக்கு முதன்முதலாக சென்றிருந்தார்.
மரபார்ந்த நடைமுறையின்படி (ப்ரொடோகால்) அப்போது அங்கு அவரை வரவேற்க வந்திருக்க வேண்டிய மகாராஷ்டிர தலைமைச் செயலா், மாநில காவல் துறைத் தலைவர், மும்பை காவல் ஆணையர் உள்பட ஒருவரும் வரவில்லை; இவ்விஷயத்தைப் பின்னர் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டி நீதிபதி பி.ஆா். கவாய் அதிருப்தி தெரிவித்தார்.
அதிருப்தியில்…
இதுதொடர்பாக பாராட்டு விழாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் பம்பாய் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி பி.ஆர். கவாய் பேசுகையில், “ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு, மற்ற துறைகள் காட்டும் இதுபோன்ற மரியாதை கவலையளிக்கிறது. இங்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நீதித்துறை, சட்டப்பேரவை, நிர்வாகம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள். இவை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் மற்றொன்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
உயரதிகாரிகளுக்கு நெறிமுறைகள் இருக்கும். ஆனால், மாநில காவல் துறை தலைவர், மும்பை காவல் ஆணையர் வர விரும்பவில்லை என்றால் அதுபற்றி அவர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
நீதிபதிகளாகிய நாங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்கிறோம். நாங்கள் நாகாலாந்து, மணிப்பூர், அசாம் மற்றும் சமீபத்தில் அமிர்தசரஸுக்குச் சென்றோம். காவல் துறைத் தலைவர், தலைமைச் செயலர், காவல் ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.

