Last Updated:
மும்பை மேயர் பதவிக்கு பாஜக மற்றும் ஷிண்டே தரப்பில் இழுபறி நீடுகிறது. தேவேந்திர பட்னவிஸ், ஏக்நாத் ஷிண்டே கூட்டணி ஒருமித்த முடிவெடுப்போம் என தெரிவித்தார்.
மும்பையின் அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஷிண்டே தரப்பு மற்றும் பாஜக இடையே இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் மொத்தமுள்ள 227 வார்டுகளில், பெரும்பான்மைக்கு 114 இடங்கள் தேவை. இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 89 இடங்களையும் கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தரப்பு 29 இடங்களையும் வென்றுள்ளன. உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா 65 இடங்களையும் காங்கிரஸ் 24 இடங்களையும் வென்றன.
பாஜக அதிக இடங்களில் வென்றாலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் 29 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் பாஜகவால் மேயர் பதவியை பிடிக்க முடியாது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேயர் பதவி தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஷிண்டே தரப்பு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தங்கள் கட்சி உறுப்பினர்கள் கட்சி மாறாமல் தடுக்க அவர்களை நட்சத்திர விடுதியில் ஏக்நாத் ஷிண்டே தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம், துரோகத்தால் பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும் ஏக்நாத் ஷிண்டே பிரிவில் உள்ள பலரும் தங்களுடன் உள்ளதாக உத்தவ் தாக்கரே கூறி அதிரடி கிளப்பியுள்ளார்.
இந்த குழப்பங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், “மும்பையில் மகாயுதி கூட்டணியைச் சேர்ந்தவர் தான் மேயராக வருவார் என்றும் ஏக்நாத் ஷிண்டேவும் தானும் அமர்ந்து பேசி சுமுகமாக முடிவெடுப்போம் என்றும் தெளிவுப்படுத்தி உள்ளார். தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Mumbai,Maharashtra


