கோலாலம்பூர்:
மலேசிய சீனச் சங்கத்தின் (மசீச) முன்னாள் தேசியத் தலைவரும், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான துன் டாக்டர் லிங் லியோங் சிக் (வயது 82) காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூத்த அரசியல் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்த துன் லிங்கின் மறைவு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துன் லிங் நாட்டின் வளர்ச்சிக்கும், குறிப்பாக போக்குவரத்துத் துறையின் நவீனமயமாக்கலுக்கும் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது.
அவரது அர்ப்பணிப்பு மிக்க பணிகள் எப்போதும் நினைவுகூரப்படும் என்றும், அவை எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமைச்சரவையில் நீண்ட காலம் பணியாற்றி, தேச நிர்மாணத்தில் முக்கியப் பங்காற்றிய ஒரு முதுபெரும் தலைவரை நாடு இழந்துவிட்டதாக பிரதமர் அன்வார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
துன் டாக்டர் லிங் லியோங் சிக், மசீச தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதும், மலேசிய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு மலேசிய அரசியல் களத்தில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.




