
உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் இரவு 9.51 மணியளவில் பிரிந்தது. 92 வயதான மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல் நலக்குறைவு இன்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் இரவு 8 மணிக்கு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சிகிச்சை தொடர்ந்த நிலையில், மருத்துவர்களால் மன்மோகன் சிங்கின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில் இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1991-96 இல் நிதியமைச்சராக திறமையாக செயல்பட்ட மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.
மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.
தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார்.
அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.
இதையும் படிங்க – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்திய பொருளாதாரத்தை மீட்ட மாமேதை
பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
Deeply saddened by the passing of former Prime Minister Dr. Manmohan Singh, a statesman whose intellect and leadership steered India’s economic transformation. His tenure marked an era of steady growth, social progress, and reforms that improved the lives of millions.
Dr.… pic.twitter.com/8YhWv6EDBu
— M.K.Stalin (@mkstalin) December 26, 2024
தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும். என்று கூறியுள்ளார்.
December 26, 2024 11:18 PM IST

