தாரிக்-கிற்கு 4 வயது இருக்கும்போது, 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அதாவது, அவரது தந்தை ஜியாவுர் ரஹ்மான் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதால், குடும்பத்தை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம். பொம்மைகளுடன் விளையாட வேண்டிய வயதில் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு நடுவே சிறையில் இருந்தார் தாரிக்….
பின்னர் வங்கதேசம், விடுதலை பெற்று ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபூர் ரஹ்மான் அதிபராக பதவியேற்றார். 1975-ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ புரட்சிக்கு பின்னர் தாரிக்கின் தந்தை ஜியாவுர் ரஹ்மான் முக்கியத்துவம் பெற்றார்.
முதலில் ராணுவச் சட்ட நிர்வாகியாக நாட்டை வழிநடத்திய அவர், 1977 ஆண்டு அதிகாரபூர்வமாக அதிபராகப் பொறுப்பேற்றார். ஆனால், 4 ஆண்டுகள் கழித்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது தாரிக் ரஹ்மான் பதின்ம வயது இளைஞன்…
பின்னர் 1988-ல் தனது தந்தை ஜியாவுர் ரஹ்மானின் சொந்த ஊரான போக்ராவில் சாதாரண உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 22. நாட்டின் அதிபரின் மகன் ஒரு சிறிய கிராமத்து கிளைக்குச் சென்று உறுப்பினர் அட்டை வாங்கியது அக்காலத்தில் பெரிதாக பேசப்பட்டது.
1991-இல் அவரது தாயார் கலீதா ஜியா போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தேர்தல் வியூகங்களை வகுத்தது தாரிக் தான். அந்தத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி
அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் அக்கட்சியினர் தாரிக்கை கொண்டாடத் தொடங்கினர்.
2001-ல் வங்கதேச தேசியவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தாரிக் ரஹ்மான் ஒரு அதிகாரப்பூர்வமற்ற ‘சூப்பர் பவர்’ ஆக உருவெடுத்தார். டாக்காவில் இருந்த அவரது அலுவலகமான ‘ஹாவா பவன்’ இரண்டாவது நாடாளுமன்றமாகச் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன…
அரசியலில் அவர் மிக உயரத்தில் இருந்தபோது, அவருக்கு நிழல் அரசன் எனப்படும் ‘டார்க் பிரின்ஸ்’ என்ற பெயரும் வந்தது. ஊழல் புகார்கள், ஷேக் ஹசீனா மீது கிரனேட் தாக்குதல் எனப் பல சர்ச்சைகள் எழுந்தன. இதுவே அவர் 2007-ல் கைது செய்யப்பட்டு, பிறகு லண்டனுக்குப் புலம்பெயரவும் காரணமாக அமைந்தது.
2008-ல் லண்டன் சென்ற அவர், அங்கிருந்தபடியே கட்சியின் மூத்த துணைத் தலைவராகவும், பிறகு 2018-ல் தனது தாயார் கலீதா ஜியா சிறைக்குச் சென்ற பிறகு செயல் தலைவராகவும் உயர்ந்தார். 17 ஆண்டுகள் லண்டனில் இருந்துகொண்டே வங்கதேசத்தின் ஒவ்வொரு தெருவில் உள்ள தொண்டரையும் ‘ஜூம்’ மற்றும் ‘ஸ்கைப்’ வழியாகக் கட்டுப்படுத்தியதுதான் தாரிக் அரசியலின் மிகப்பெரிய மேஜிக்..
ஷேக் ஹசீனா பதவிவிலகி இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற பிறகு, தாரிக் ரஹ்மான் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அவர் கடந்த டிசம்பர் மாதம் நாடு திரும்பினார். அவர் நாடு திரும்பியபோது பல லட்சம் தொண்டர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற I Have a Dream உரையைப் போன்று I Have a plan என முழக்கமிட்டார்.
தாரிக் டாக்கா திரும்பிய ஐந்தே நாட்களில், அவரது தாயார் கலீதா ஜியா காலமானார்.
இந்த சோகம் ஒரு புறம் இருக்க இரண்டு மாதங்களுக்குள் நடந்த பொதுத்தேர்தலில் கட்சியை முன்னின்று நடத்தி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
வெறும் 50 நாட்களில் மிகப்பெரிய தேர்தலை எதிர்கொண்டு நாட்டின் பிரதமராக மாறிய அவரது வேகம் வியப்பிற்குரியது.

