Last Updated:
NEET கலந்தாய்வில் NRI ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், போலி சான்றிதழ்கள் மூலம் 811 பேர் மருத்துவ சீட் பெற்றது, 18000 இடங்கள் நிரம்பியதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் கலந்தாய்வில், என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தகுதியற்ற மாணவர்கள் மருத்துவ இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் கலந்தாய்வில், என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அதாவது, வெளிநாட்டில் இருக்கும் தூரத்து உறவினர்கள் யாராவது ஒருவரைப் பாதுகாவலராகக் காட்டி, அவர்கள் தங்களின் படிப்புச் செலவை ஏற்பதாகப் போலிச் சான்றிதழ் சமர்ப்பித்து பலர் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் மட்டும் சுமார் 811 பேர் தங்களை என்.ஆர்.ஐ. பிரிவுக்கு மாற்றி மருத்துவ சீட் பெற்றது அம்பலமாகி உள்ளது.
800 மதிப்பெண்களுக்கு வெறும் 28 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட, முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் கதிரியக்கவியல் உள்ளிட்ட முக்கியப் பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ்கள் மூலம் சுமார் 18,000 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பலர், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்ட பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினர் என்ற பிரிவில் தங்களைக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களால், ஆண்டுக்கு 45 லட்சம் முதல் 95 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த எப்படி முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


