பத்து பஹாட்:
தங்கள் வீட்டிற்குள் புகுந்து சுமார் 15,000 ரிங்கிட் மதிப்பிலான தங்கக் காப்பை கொள்ளையடித்த நபர், தங்களது சொந்த மருமகன் என்பதை அறிந்து முதிய தம்பதி அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி மதியம் 1 மணி அளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 71 வயது மதிக்கத்தக்க பெண்மணி மற்றும் அவரது 80 வயது கணவர் வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து மிரட்டியுள்ளார்.
முதலில் அந்த நபர் முதிய பெண்ணிடம் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். ஆனால் அவர் அப்போது சங்கிலி அணிந்திருக்கவில்லை என்பதால், அவர் கையில் அணிந்திருந்த தங்கக் காப்பைப் பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
கொள்ளையடித்த பிறகு, அந்த நபர் வீட்டின் அருகே காரில் காத்துக்கொண்டிருந்த தனது 31 வயது மனைவியுடன் தப்பிச் சென்றுள்ளார்.
கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் போலீசார் அடையாளம் கண்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை கிள்ளானில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இன்று பத்து பஹாட் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவருக்கும், வரும் செவ்வாய்க்கிழமை வரை 7 நாட்கள் போலீஸ் தடுப்புக்காவல் (Remand) வழங்கி மஜிஸ்திரேட் நுராசிதா ஏ ரஹ்மான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 395-ன் (கூட்டுக் கொள்ளை) கீழ் விசாரணை செய்யப்படுகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.




