தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் எழுத்தாளராக ராஜ்ஸ்ரீ செல்வராஜ் திகழ்கிறார். இவர் எழுதிய ‘வென்ற கதை’ என்னும் தலைப்பில் தொழில், சினிமா, மருத்துவம், கலை எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை பேட்டியெடுத்த தொகுப்பு நூலாக ஏற்கனவே வெளிவந்துள்ளது. மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் உலக அரசியல், சமூகம், அறிவியல் சார்ந்த தலைப்புகளில் இவரது நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன.
இப்போது “யாவரும் கேளிர்” தலைப்பில் இவர் எழுதி வெளிவந்துள்ள நூல், முதல் தமிழ் குடியேற்றம் எங்கு, எப்போது நடந்தது? எனும் நமது கேள்விக்கு விடைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. இன்று பிரான்சிலோ, தாய்லாந்திலோ ஒரு பொதுவிடத்தினில் நின்றுகொண்டு, சற்றே உரத்த குரலில் தமிழில் பேசினால், யாரேனும் தமிழிலேயே பதிலளிக்க அதிக வாய்ப்புண்டு. உலகின் பல நாடுகளில் அங்கிங்கெனாதபடி இன்று பரவியிருக்கின்றனர் தமிழர்கள்.
ஆனால் முதல் தமிழ் குடியேற்றம் எங்கு, எப்போது நடந்தது? அதை விட முக்கியமாக ஏன் வேறொரு நிலத்தைத் தங்கள் இருப்பிடமாக அம்மக்கள் தேர்ந்தெடுத்தனர்? அவர்களது சந்ததியினர் இன்று எவ்வாறு வாழ்கிறார்கள்? 18-19 நூற்றாண்டுகளில் கடல்களைக் கடந்து தூரதேசங்களில் தமிழர்கள் சென்றிறங்கிய கரும்பு, ரப்பர், தேயிலைத் தோட்டங்களில் அவர்களுக்குப் பல நிலைகளில் சங்கடங்கள் காத்திருந்தன. பசி, நோய், அடக்குமுறை என அனைத்தையும் தாங்கிக்கொண்டனர்.
கடின உழைப்பு அவர்களுக்கு அடையாளத்தைத் தந்தது. சவாலான சூழ்நிலைகளில் மன உறுதி அவர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது. அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டவர்கள் ஒரு கட்டத்தில், தாங்கள் குடிபுகுந்த மண்ணின் மைந்தர்களாகவே மாறிப்போயினர். இவையனைத்தையும் தங்கள் மொழி, மரபு, நம்பிக்கை இவற்றைக் கைவிடாமலேயே செய்தனர். காற்றில் வீசியடிக்கப்பட்ட விதைகள் வேறிடத்தில் விழுந்து முளைப்பதைப் போல, அறிமுகமில்லாத நாட்டில் தமிழர்கள் வேரூன்றினர். சகிப்புத் தன்மையும் போராட்டங்களும் சரிவிகிதத்தில் கலந்த, பெரிதும் பேசப்படாத உலகத் தமிழர் வரலாற்றைச் சொல்கிறது “யாவரும் கேளிர்” என ராஜ்ஸ்ரீ செல்வராஜ் தமது நூல் குறித்து விளக்கமளித்து ள்ளார்.
-ராமேஸ்வரி ராஜா





