Last Updated:
முதலமைச்சர் கோப்பைக்கான இறகு பந்து விளையாட்டு போட்டி. போட்டியில் கலந்து கொண்டு அசத்திய அரசு அதிகாரிகள்.
நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான இறகு பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் மருத்துவர் அணி அபாரமாக விளையாடியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவின் கீழ் 25 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி இறகுபந்து போட்டியில் கலந்து கொண்டார். அதன்படி பெண் அரசு ஊழியர்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் ஆகியோர் ஒரு அணியும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் செல்வபிரியா, ஷோபனா ஆகியோர் ஒரு அணியும் மோதினர்.
இந்த போட்டியில் 7 – 21 என்ற புள்ளி கணக்கில் அரசு மருத்துவர்கள் இணையான செல்வபிரியா, ஷோபனா ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் அணியை எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். அரசு ஊழியர்கள் பிரிவில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி இரட்டையர் இறகு பந்து போட்டியில் கலந்துகொண்டு விளையாடியது அங்கிருந்த சக அரசு ஊழியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
August 31, 2025 5:48 PM IST


