Last Updated:
Chess | இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறும் அறிவிக்கப்பட்டதையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகக் கோப்பை செஸ் தொடரை சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை செஸ் தொடர், முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை நடைபெறும் எனவும் போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக் அவுட் முறையில் நடைபெறவுள்ள இந்த தொடரில் மொத்தம் 206 வீரர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றனர். ஒவ்வொரு சுற்றையும் 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்கள் கிளாசிக்கல் போட்டியாகவும், சமனில் முடிந்தால் மூன்றாவது நாள் ரேபிட் முறையில் டைபிரேக்கர் ஆட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் 10 முறை நடைபெற்றுள்ள உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்தியர் யாரும் பட்டம் வென்றதில்லை. கடைசியாக 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரில் கார்ல்சனுடன் போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தா இரண்டாமிடம் பிடித்தார். இதுவே உச்சபட்ச சாதனையாக உள்ளது. 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்திமுடித்த தமிழ்நாடு அரசு உலகக் கோப்பை தொடரையும் நடத்த தயாராகவுள்ளதாக மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
July 22, 2025 8:03 AM IST


