முடிவுக்கு வந்தது ஈரான் போர்: வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது ஹார்முஸ் ஜலசந்தி!!
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவியது. போரை காரணமாக கூறி ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் வளைகுடா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி, உரம் ஆகியவற்றின் சப்ளை முடங்கி இந்தியா உட்பட உலக நாடுகள் ஸ்தம்பித்து போயின. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிலிண்டர் தட்டுப்பாடு என பல பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டோம். இதற்கிடையே ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது.

உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க தொடங்கியதை அடுத்து அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் குறிப்பிட்ட சில பிரிவுகளில் உடன்பாடுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்பட பல்வேறு நாடுகளின் முயற்சியால் ஈரான் , அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தப்படி இரு நாடுகளும் மோதலை நிரந்தரமாக கைவிட வேண்டும். ஈரான் துறைமுகங்களை முடக்கியுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர வழிவகுக்கும்.
இந்த அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை (19ஆம் தேதி) சுவிட்சர்லாந்தில் வைத்து அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தப்படி, அனைத்து தரப்பும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களில் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் இரு தரப்பும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் இந்த சிறப்பான ஒப்பந்தம் இப்பகுதி முழுமைக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் எனக் கூறியிருக்கிறார். ஈரானுடன் அமைதியை ஏற்படுத்த பல அதிபர்கள் முயற்சி செய்தனர் ஆனால் தன்னால்தான் அது சாத்தியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை அன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆவதை தொடர்ந்து கன்னி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் எண்ணெய் விநியோகம் நடைபெறும் எனக் கூறியிருக்கிறார்.
இதற்காக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க படைகளின் முற்றுகை உடனடியாக அகற்றப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார் எனவே வரும் வெள்ளிக்கிழமை முதல் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவது உறுதியாக இருக்கிறது ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வழக்கம் போல கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறும். இதனால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய், எல்பிஜி, உரம் ஆகியவை சீராக கிடைக்கும்.

