பாஜகவிற்கு தனிப்பெரும்பானமை கிடைக்காததால், சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் முக்கிய அமைச்சர் பதவிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலின் முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியானது. 400 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பெரும்பான்மைக்கு சற்று அதிகமாக 292 இடங்கள் மட்டுமே அக்கூட்டணிக்கு கிடைத்தது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை வென்றுள்ளது.
பாஜகவிற்கு தனிப்பெரும்பானமை கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமாரும், சுமார் 30 இடங்களை வென்று இந்த கூட்டணியில் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளனர். இந்த நிலையில், இரு கட்சிகளும் முக்கிய அமைச்சர் பதிவிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சிஎன்என்-நியூஸ்18 உடன் பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள், அக்கட்சி மக்களவையின் சபாநாயகர் பதவியை கேட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். கட்சி தாவல் தடை சட்டத்தை மனதில் கொண்டே தெலுங்கு தேசம் இந்த பதவியே கேட்பதாக தெரிகிறது. மேலும் 2 மத்திய அமைச்சர் பதவியை பாஜகவிடமிருந்து பெற தெலுங்கு தேசம் கட்சி திட்டமிட்டிருப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும், பீகாரில் 12 எம்.பி.க்களை வென்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார், விவசாயத்துறை அமைச்சர், ரயில்வே அல்லது தொழில்துறை போன்ற முக்கிய இலாக்காக்களை குறிவைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமில்லாமல், நிதீஷ் குமார் 3 அல்லது 4 மத்திய இணை அமைச்சர் பதவியை எதிர்ப்பார்த்து காத்துள்ளார். தொடர்ந்து சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவும், லோக் ஜனசக்தியின் சிராங் பஸ்வான் ஆகியோர் தலா 1 அமைச்சர்களை கேட்டுள்ளதாக தெரிகிறது.


