Last Updated:
கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை சற்று உயர்ந்து விற்பனை.
இரண்டு மாத தடைக்காலம் நிறைவடைந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் கடல் நீரோட்டத்தால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்களின் வரத்து இல்லை. கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் நிலையில் மீன்களின் விலை உயர்ந்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் இரண்டு மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் விசைப்படகுகள் பராமரிப்புப் பணியை மீனவர்கள் மேற்கொண்டனர். மேலும், தடைக்காலம் ஜூன் 15-ம் தேதியுடன் நிறைவடைந்தும் மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று வீசியதால் மீன்பிடி அனுமதிச்சீட்டு மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
நேற்று முன்தினம் கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று அதிகாலை மீன்வளத்துறையிடம் இருந்து மீன்பிடி அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொண்டு தென்கடலான மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து இன்று கரை திரும்பினர்.
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மீன்களின் வரத்து இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்வதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
June 19, 2025 10:59 AM IST

