Last Updated:
பிரதமர் மோடி இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
3 நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொழும்பு விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. சுதந்திர சதுக்கத்தில், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
இதனையடுத்து, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை சந்தித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது, மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ள அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பின்னர், பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவத் துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இணைந்து சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிக்க: பிரதமர் மோடி வருகை.. ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!
இதையடுத்து, இலங்கை அரசின் உயரிய விருதான “மித்ரா விபூஷண” விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு பேசிய பிரதமர் மோடி, “இந்த விருது இந்தியாவின் 140 கோடி மக்களுக்கு கிடைத்த பெருமை” என்று கூறினார்.
April 05, 2025 1:34 PM IST


