ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்கள், ரஷ்யா தனது படைகளுக்கு எரிபொருள் வழங்கப் பயன்படுத்தும் ஒரு எண்ணெய் கிடங்கு மற்றும் எரிபொருள் வசதிகளைத் தாக்கியுள்ளன என்று ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதிகாலைவேளை நடத்தப்பட்ட தாக்குதல்
மொஸ்கோவால் நியமிக்கப்பட்ட கிரிமியாவின் ஆளுநர் செர்ஜி அக்சியோனோவ், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை நடந்த இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 28 பேர் காயமடைந்ததாகக் கூறினார்.

இதேபோல், கிரிமியாவிற்கு கிழக்கே உள்ள ரஷ்யாவின் கிராஸ்னோடார் பிராந்தியத்தில் உள்ளூர் அதிகாரிகள், ஒரு எண்ணெய் போக்குவரத்து வசதி மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் பயணிகள் படகில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒரு எண்ணெய் முனையம் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்றிரவு 239 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி
கிரிமியாவின் கெர்ச் நகரில் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கையும், கிராஸ்னோடாரில் உள்ள ஒரு எண்ணெய் போக்குவரத்து வசதியையும் உக்ரைன் தாக்கியதை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

கிரிமியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பல வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளன.
தீபகற்பத்தின் கிழக்கு முனையில் அமைந்துள்ள துறைமுக நகரமான கெர்ச்சில் உள்ள எரிபொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நகரின் மீது ஒரு பெரிய புகை மேகம் சூழ்ந்ததாகவும் கிரிம்ஸ்கி வெட்டர் டெலிகிராம் சனல் செய்தி வெளியிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

