Last Updated:
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததால், பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக, சனிக்கிழமை மாலை காற்றின் தரம் 450 என்ற அளவில் அபாயக்கட்டத்தை எட்டியது. இதனால், காற்று மாசை கட்டுப்படுத்தும் செயல்திட்டமான நான்காம் கட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டுமெனவும் மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை வழங்கும் லாரிகளைத் தவிர்த்து, மற்ற லாரிகளின் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரை ஹைபிரிட் முறைப்படி அதாவது குறிப்பிட்ட நாட்களில் ஆன்லைன் வகுப்புகளும், சில நாட்கள் நேரடி வகுப்புகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளி இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, மூன்றாம் கட்டம் அமலுக்கு வந்த நிலையில், நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
December 14, 2025 7:07 AM IST


